திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம்
கிருஷ்ணாவதாரம் தசாவதாரத்தில் ஒன்பதாவது. எட்டு அவதாரத்தில் செய்ய முடியாததைச் செய்ய கிருஷ்ணாவதாரம் எடுத்தாராம். ஏனென்றால் இதில்தான் நம்மை உய்யச்செய்யும் கீதை சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வர் பெரியோர்..
பகவான் பாமரஜனங்களையும் உய்விக்க அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் , அதாவது சாஸ்திர அறிவு இல்லாமல் அன்பு ஒன்றையே அறிந்த ஆய்க்குலத்தில் வளர்ந்து அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தான். இந்த அன்பே பின்னர் கீதையாய் மலர்ந்தது.
ஸஹஸ்ரநாம்னாம் புண்யானாம் த்ரிருக்தானாம் யத் பலம்
தத் பலம் லபதே ஜந்து: க்ருஷ்ண இத்யக்ஷரமாதரத:
கிருஷ்ணா என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே ஆயிரம் நாமங்களை மூன்று முறை கூறிய பலன் , மனிதர் மாத்திரம் அல்ல எந்த உயிருக்கும் கிடைக்கிறது.
அப்படி இருக்கையில் கிருஷ்ணனை சதா ஸ்மரித்துக் கொண்டிருந்த கோப கோபியரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
த்வாபரயுகத்தில் கண்ணன் செய்ததை கலியுகத்தில் செய்தவள் ஆண்டாள். திருப்பாவை மூலம் பக்தி, கரம யோகம் ஞானயோகம் எல்லாவற்றையும் காட்டியவள். பக்தியில் மூன்று வகை. முதலாவது பூஜை, அவன் பாதங்களில் மலரிட்டு வணங்குவது. இரண்டாவது நாமசங்கீர்த்தனம் – அவன் நாமங்களை கீர்த்தனம் செய்வது, மூன்றாவது அவனையே சரணம் என்று அடைவது. இந்த மூன்று விதங்களும் முறையே திருப்பாவையின் முதல் பத்து, இரண்டாவது பத்து, மூன்றாவது பத்து பாசுரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
கோதா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்க்கலாமா?
காம் ததாதி இதி - பகவானை அடைய உதவும் வாக்கை அளித்தவள்
கவா தத்தா –பூமியால் கொடுக்கப்பட்டவள்
கா: தமயதி- புலனடக்கத்தை போதிப்பவள்.